ஒரு ஆளுநராக அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.. கடும் எதிர்ப்பால் பின் வாங்கிய காஷ்மீர் கவர்னர்
ஸ்ரீநகர்: ஒரு ஆளுநராக இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்க கூடாது என்று, ஜம்மு காஷ்மீர் ஆளுநர், சத்யபால் சிங், இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கொல்லுங்கள், அப்பாவி போலீஸ்காரர்களை கொல்லாதீர்கள் என்று, காஷ்மீர் ஆளுநர் சத்யபால் சிங் நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
ஆளுநரின் கருத்துக்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டதாவது: "இந்த ட்வீட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு முக்கிய அரசியல்வாதியோ அல்லது சேவை / ஓய்வுபெற்ற அதிகாரியோ கொல்லப்பட்டால் அது ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களின் வெளிப்படையான உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாகவே அர்த்தம்" என காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் சத்யபால் மாலிக். அவர் இன்று கூறுகையில், பரவியுள்ள ஊழல் காரணமாக கோபத்துடனும் விரக்தியுடனும் பேசியதாக மாலிக் விளக்கம் தெரிவித்துள்ளார்.
உலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு
"ஆளுநராக, நான் அத்தகைய கருத்தை கூறக்கூடாது, ஆனால் எனது தனிப்பட்ட உணர்வு. பல அரசியல் தலைவர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும், இங்கு ஊழலில் மூழ்கியுள்ளனர்" என்று அவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஊழல் செய்ததாகவும், தேர்தல்களில் வாக்களிப்பு குறைவாக இருப்பதால் வெகுஜன ஆதரவு அவர்களுக்கு இல்லை என்றும் ஆளுநர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.