காமராஜரை மறந்துவிட்டார்கள்.. டீ விற்றேனே தவிர, நாட்டை விற்கவில்லை: காங். மீது மோடி கடும் தாக்கு
Recommended Video
ராஜ்கோட்: நான் டீ விற்றது உண்மைதான் ஆனால், காங்கிரஸை போல நாட்டை விற்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதி ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி தீவிர பிரசாரங்களை நடத்தி வருகிறார்.
இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் மோடி ஆவேசமாக உரையாற்றினார்.
ஏழைகளை பிடிக்காது
மோடி உரையாற்றியதாவது: காங்கிரசுக்கு என்னை கண்டிப்பாக பிடிக்காது. ஏனெனில் நான் ஏழை குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். ஒரு கட்சி இவ்வளவு இறங்கி வந்து பேச முடியுமா? முடியும் ஏனெனில் நான் ஏழை குடும்பத்திலிருந்து பிரதமராக உயர்ந்துள்ளேன். காங்கிரஸ் தலைவர்களால் இதை பொறுக்கவே முடியவில்லை.
நாட்டை விற்கவில்லை
நான் டீ விற்றேன் என்பது உண்மைதான். ஆனால், நான் நாட்டை விற்கவில்லை. கடந்த இரு மாதங்களாகவே காங்கிரஸ் தலைவர்கள் என்மீது சேற்றைவாரி இறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி, ஒரு கெட்ட பெயரையும் சம்பாதிக்காத குஜராத்தின் மகனான என்னையோ, அல்லது ஏழைகளையோ அவமானப்படுத்த கூடாது.
குஜராத்தின் மகன்
குஜராத்துக்கே வந்து குஜராத்தின் மகனை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள். இதை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை தாண்டி யோசிக்காது. குஜராத்தை சேர்ந்த எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும், அக் கட்சி தேசிய அளவில் வளரவிட்டதில்லை.
காமராஜர் மறக்க வைக்கபட்டார்
சர்தார் வல்லபாய் பட்டேலை அவமானப்படுத்தியது காங்கிரஸ். அதேபோல குஜராத்தை சேர்ந்தவர் என்பதால், மொராஜி தேசாய் புறக்கணிக்கப்பட்டார். எத்தனை பேர் காங்கிரசின் தலைவர்களாக இருந்த காமராஜரையோ, தேபரையோ எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளார்கள்? அந்த கட்சி ஒரு குடும்பத்தை தாண்டி போகாது. அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இவ்வாறு மோடி பேசினார்.
மோடியின் படிப்பறிவு குறித்த கேலி மீம்களை குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங். பயன்படுத்தி வரும் நிலையில், மோடி இவ்வாறு கடுமையாக பேசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.