துணை முதல்வர் சொத்துக்கள் பறிமுதல்... லாலுவின் மகன் - மகள் மீது ஐ.டி. அதிரடி நடவடிக்கை
பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் மகன், மகள் மற்றும் மருமகனின் பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
பாட்னா: பீகார் துணை முதல்வரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வியின் பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே போல லாலு பிரசாத்தின் மகள், மருமகனின் பினாமி சொத்துகளையும் பறிமுதல் செய்து முடக்கி ஐ.டி. அதிகாரிகள் பரபரப்பை கூட்டியுள்ளனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியின் ஆடிட்டர் ராகேஷ் அகர்வால், 8 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.
ஐ.டி. ரெய்டு
லாலு பிரசாத் குடும்பத்தின் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் புகார் எழுந்தன. இதுதொடர்பாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
லாலு மகளுக்கு நோட்டீஸ்
மேலும், லாலுவின் மகள் மிசா பாரதியும், அவரது கணவர் சைலேஷ் குமாரும் பினாமி பெயரில் சொத்து சேர்த்திருப்பதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ரூ. 10 ஆயிரம் அபராதம்
இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. மேலும், ஏன் ஆஜராகவில்லை என விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை கடந்த 6ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
சொத்து பறிமுதல்
இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகனும், பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோரின் பினாமி சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.