இரட்டை இலை லஞ்ச புகாரில் சிக்கிய சுகேஷை தெரியுமா… ஐ டெல் யூ லேட்டர்.. தினகரன் அசால்ட் பதில்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள சுகேஷை தெரியுமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ‘ஐ டெல் யூ லேட்டர்’ என்று தினகரன் அசால்ட் பதில் அளித்துள்ளார்.
டெல்லி: சுகேஷைப் பற்றி அப்புறம் சொல்கிறேன் என்று டெல்லியில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தரகர் சுகேஷ் சந்திராசேகர் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனன், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
5 நாட்கள் போலீஸ் கஸ்டடி
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோரை 5 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
சென்னையில் விசாரணை
விசாரணையின் ஒரு பகுதியாக டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்த போலீசார், ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், பெரம்பூர், திருவேற்காடு, தினகரனின் அடையாறு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சம்மன்
தினகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன், தனியார் செல்போன் நிறுவன மேலாளர் டேனியல், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.
மீண்டும் டெல்லி
மேலும், தினகரனின் வழக்கறிஞர் மோகன் ராஜ் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சென்னை விசாரணையை முடித்துக் கொண்ட டெல்லி உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸார், தினகரனையும், மல்லிகார்ஜுனனையும் அழைத்துக் கொண்டு டெல்லி புறப்பட்டனர்.
கருத்து கூற மறுப்பு
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் தினகரனிடமிருந்து ஒரு வார்த்தையாவது பெற்று விட வேண்டும் என்று செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்தனர். அதற்கு தினகரன், வழக்கு குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கூறினார்.
டெல் யூ லேட்டர்
இந்த பதில் போதாது என்று நினைத்த செய்தியாளர்கள், தினகரனிடம் இரட்டை இலை லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள சுகேஷை தெரியுமா என்று நேரடியாக கேள்வி எழுப்பினர். இதற்கு ‘ஐ டெல் யூ லேட்டர்' என்று தினகரன் பதில் அளித்தார்.