ரஜினியிடம் ஒன்றுமே இல்லை... அப்புறம் ஏன் அரசியலுக்கு வரனும்? மார்க்கண்டேய கட்ஜு விளாசல்
டெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் தினமும் வெளியான வண்ணம் உள்ளன.
அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ரஜினி ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்றும் ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
முட்டாள்தனமான பக்தி
இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டரில், " தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் எப்போதுமே புரிந்துகொள்ள முடியவில்லை.
சிவாஜி படம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது , ஒருசமயம் எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து 'சிவாஜி கணேசன்' நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
முதல்வர்
இப்போதும், ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.
என்னதான் இருக்கிறது?
ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வைத்துள்ளாரா அவர். அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை." என்று கட்ஜு பதிவிட்டுள்ளார்.