காகம் அமர்ந்ததால் காரை மாற்ற உத்தரவிட்டாரா கர்நாடக முதல்வர் சித்தராமையா?
பெங்களூர்: கார் மீது காகம் அமர்ந்திருந்த விவகாரம் விவாத பொருளான நிலையில், அந்த காரை மாற்றிவிட்டு புதிய காரை வாங்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 2ம் தேதி காகம் ஒன்று சித்தராமையாவின் அரசு கார் பக்கவாட்டு கண்ணாடி மீது 10 நிமிடமாக அமர்ந்து கொண்டு, ஊழியர்கள் எவ்வளவு விரட்டியும் எங்கும் போகாமல் போக்கு காட்டியது.
சித்தராமையாவுக்கு நேரம் சரியில்லை என்பதை காகம் குறிப்பால் உணர்த்தியுள்ளதாக டிவி சேனல்களில் ஜோதிடர்கள் கருத்து கூறினர். இந்த நிலையில் சித்தராமையா தனது காரை மாற்றிவிட்டு புதிய பார்ச்சூனர் காரை வாங்க உத்தரவிட்டுள்ளது வெறும் வாயை மென்று கொண்டிருந்த பாஜகவினருக்கு அவலை கொடுத்ததை போல ஆகிவிட்டது.
நாத்தீகர் என்று கூறிக்கொள்ளும் சித்தராமையா, காகம் உட்கார்ந்த காரை மாற்றுவதன் மூலம், இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று என்பது சித்தராமையா வாடிக்கை என்று சாடியுள்ளார் பாஜக செய்தித்தொடர்பாளர் சி.டி.ரவி.
இதனிடையே நிருபர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த சித்தராமையா, அந்த கார் 2 லட்சம் கி.மீ தூரம் பயணித்துவிட்டதால் பழுது அடையத் தொடங்கிவிட்டது. எனவே காரை மாற்ற கூறினேன். வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.