அப்சல் குரு தீவிரவாதியா, தியாகியா..? லோக்சபாவில் சோனியாவுக்கு பாஜக எம்.பி கேள்வி
டெல்லி: அப்சல் குரு தீவிரவாதியா அல்லது தியாகியா என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் லோக்சபாவில் தெரிவித்தார்.
ஜே.என்.யூ விவகாரம், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரம் ஆகியவை குறித்து இன்று பிற்பகல் முதல் லோக்சபாவில் விவாதம் நடந்தது.
இதில் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், "கடந்த 9ம் தேதி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் உண்மையை உலகத்திற்கு சொல்லக்கூடியவை. அப்சல் குருவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறதா என்பதை தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தளவில், அப்சல் குரு என்பவர் யார்? நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட தீவிரவாதியா? தியாகியா? என்பதை சோனியா காந்தியிடம் நான் கேட்க விரும்புகிறேன்.
அப்சல் குருவுக்கு ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ராகுல் ஏன் ஆதரவு கொடுத்தார் என்ற கேள்வி அவரை பின்தொடர்ந்து கொண்டேதான் இருக்கப்போகிறது. ஜே.என்.யூவிற்கு சென்ற இதே ராகுல் காந்தி, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் வீட்டுக்கு செல்லவில்லை.
எனவே, தேச விரோத சென்டிமென்டுகளுக்காக மக்களின் வரிப்பணத்தை வீண் செய்து, லோக்சபா தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.