என் கணவரை சந்திக்க வேண்டும்.. சேலத்தில் அவரை சந்திப்பேன் என நம்புகிறேன்.. ஹதியா!
தன் கணவரை சந்திக்க விரும்புவதாக ஹோமியோபதி மாணவி ஹதியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: தன் கணவரை சந்திக்க விரும்புவதாக ஹோமியோபதி மாணவி ஹதியா தெரிவித்துள்ளார். சேலத்தில் அவரை சந்திப்பேன் என்றும் ஹதியா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் அருகே வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா (22). இஸ்லாம் மதம் மாறிய இவர் தனது பெயரை ஹதியா என்ற மாற்றி கொண்டு, ஷாபின் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதை எதிர்த்து ஹதியாவின் தந்தை அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்து, அவர் தந்தையுடன் செல்ல உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை
இதையடுத்து ஹதியா கடந்த சில வாரங்களாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஷாபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை வழக்கு விசாரணைக்காக டெல்லி அழைத்து செல்லப்பட்ட ஹதியா, பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
சுப்ரீம்கோர்ட் அனுமதி
விசாரணையின் போது, ஹதியா தன் கணவருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஹதியா ஏற்கனவே படித்து வந்த சேலம் ஹோமியோபதி கல்லூரி படிப்பை தொடர கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். சேலம் ஹோமியோபதி கல்லூரி டீன், ஹதியாவுக்கு பாதுகாப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏதேனும் பிரச்னை நேர்ந்தால் அவர் உடனடியாக எங்களை அணுக முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
கணவரை சந்திக்க விரும்புகிறேன்
இதைத்தொடர்ந்து ஹதியா இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் தனது கணவர் ஷாபின் ஜகானை சந்திக்க விரும்புவதாக கூறினார்.
சேலத்தில் சந்திப்பேன்
சேலத்தில் அவரை சந்திப்பேன் என நம்புவதாகவும் ஹதியா கூறினார். கேரள போலீசாரின் பாதுகாப்போடு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை கொண்டு செல்லப்படும் ஹதியா அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.