நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா.. மீடியாக்கள் மீது சீனிவாசன் பாய்ச்சல்
டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் என்னை மீடியாக்கள் வாய்ப்பே தராமல் தாக்கி எழுதின. என்னைப் பற்றி கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு முதல் பக்கத்தில் செய்தி போட்டன. 81 செய்திகள் எழுதியுள்ளன. நான் கேட்கிறேன், நான் என்ன அவ்வளவு முக்கியமான ஆளா என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் கேட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம், சீனிவாசன் மீண்டும் கிரிக்கெட் வாரியத் தலைவராக பொறுப்பேற்கலாம் என உத்தரவிட்டு விட்டது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் சீனிவாசன். அப்போது அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் திணறினார்.. அதை மறைக்க குருநாத் குறித்த கேள்விகளுக்கு தான் பதிலளிக்க மாட்டேன் என்று கூறினார். ஒரு கட்டத்தில் இப்படியே கேட்டால் நான் எழுந்து போய் விடுவேன் என்றும் கோபமாக கூறினார் சீனிவாசன்.
நான் தவறு செய்யவில்லை...
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால்தான் இந்தப் பொறுப்புக்கு மீண்டும் வந்துள்ளேன். நான் தவறு செய்திருந்தால் எனது மனசாட்சி அதை சுட்டிக் காட்டியிருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் எனது மனசாட்சி என்னை சுட்டிக் காட்டவில்லை. அதனால் இப்பொறுப்புக்கு மீண்டும் வந்துள்ளேன்.
இதுதான் சாலையென்றால்...
இதுதான் சாலை என்றால் அதில்தான் நாம் போயாக வேண்டும். ஒவ்வொருவரின் பாதையும் வேறு படும். அதுபோலத்தான் கருத்துக்களும்.
விசாரணைக் குழு குறித்து கேட்காதீர்கள்
பிசிசிஐ நியமித்த விசாரணைக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் தலைவர் பதவியிலிருந்து விலகி இரு்நதபோதுதான் அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அதில் நான்உறுப்பினர் கிடையாது. அதற்கும், எனக்கும் சம்பந்தமும் இல்லை.
விசாரணை அறிக்கையிலும் எனது தொடர்பு கிடையாது
அதேபோல அந்த விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையிலும் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அப்படி இருக்கையில் அதுகுறித்து நான் பதிலளிக்க முடியாது.
என் மீது யாருக்கும் கோபம் இல்லை
ஐபிஎல் பிக்சிங் விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட்டிற்கு அவமானம் நேர்ந்து விட்டதாக நான் கருத முடியாது. மக்கள் யாரும் என் மீது கோபமாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். உண்மையில் மீடியாக்கள்தான் என்னை தொடர்ந்து தாக்கி வந்தன.
நான் என்ன அவ்வளவு முக்கியமானவா...
கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு தொடர்ந்து என்னை முதல் பக்க செய்தியாக போட்டனர். என்னைப் பற்றி கிட்டத்தட்ட 81 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. எனக்கு வாய்ப்பே அளிக்காமல் தொடர்ந்து தாக்கி வந்தனர். நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா, முக்கியமான நபரா...