இந்தி தெரியாததால்தான் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி கொடுக்கலையா சோனியா?
டெல்லி: எனக்குப் பிரதமர் பதவியைக் கொடுக்காமல் மன்மோகன் சிங்குக்கு அப்பதவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கியதால் எனக்கு ஏமாற்றம் இல்லை. எனக்கு அப்போது இந்தியும் தெரியாது. எனவே அப்பதவிக்கு நான் தகுதியற்றவனாகவே அப்போது இருந்தேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பிரதமர் பதவி கிடைக்காமல் 2 முறை பெரும் ஏமாற்றத்தை சந்தித்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் அவர் பிரதமர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதை ராஜீவ் கைப்பற்றினார். பின்னர் சோனியா காந்தியால் பிரதமராக முடியாத நிலை ஏற்பட்டபோது அப்பதவி தனக்கு வரும் நினைத்திருந்தார். ஆனால் மன்மோகன் பிரதமராகி விட்டார்.
இந்த நிலையில் தனக்குப் பிரதமர் பதவி கிடைக்காமல் போனது குறித்து தனது சுயசரிதையான The Coalition Years: 1996-2012 நூலின் 3வது அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் முன்னிலையிலும் பேசினார் பிரணாப். அதன் சுவாரஸ்ய பகுதிகள் உங்களுக்காக:
மன்மோகன் சிங் பிரதமரானார்
பிரணாப் பேசுகையில் 2004ம் ஆண்டு எனக்குப் பதில் மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நான் வருத்தமடையவில்லை. ஏமாற்றமும் அடையவில்லை. உண்மையில் அப்போது நான் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவனாகத்தான் இருந்தேன்.
பிரதமராகும் தகுதி எனக்கில்லை
நான் நீண்ட காலம் ராஜ்யசபாவிலேயே இருந்து விட்டேன். 2004 தேர்தலில்தான் நான் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இன்னொரு முக்கியக் காரணம், எனக்கு அப்போது இந்தி தெரியாது.
இந்தி தெரியாதாவர்களுக்கு பிரதமர் பதவி கூடாது -காமராஜர்
இந்தி தெரியாவிட்டால் பிரதமர் பதவி கிடையாது என்று பெருந்தலைவர் காமராஜரே கூறியுள்ளார். எனவே அந்த அடிப்படையில் இந்தி தெரியாத நான் அந்தப் பதவிக்கு லாயகற்றவனாக இருந்தேன். இதனால்தான் நான் பிரதமர் பதவிக்கு தகுதியுள்ளவனாக அப்போது இல்லை.
மன்மோகன் சிங் உண்மையிலேயே நல்ல தேர்வு
மன்மோகன் சிங் உண்மையிலேயே நல்ல தேர்வு., சிறந்த தேர்வு. அப்போது நான் அப்படித்தான் நினைத்தேன். அவர் திடீர் அரசியல்வாதி என்றாலும் கூட வெகு விரைவிலேயே அனைத்தையும் அறிந்து கொண்டார். அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டார். அது பாராட்டப்பட வேண்டும். தனிச் சிறப்பு வாய்ந்தவர் மன்மோகன் சிங். சிறந்த பொருளாதார அறிவு கொண்டவர். நிர்வாக அனுபவம் மிக்கவர் என்றார் பிரணாப் முகர்ஜி.