'இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம்' - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற நந்தினி நெகிழ்ச்சி
ஐஏஎஸ் தேர்வில் முதலாவதாக வந்த நந்தினி, தனது முதல் மாத சம்பளத்தை இலவச கல்வித் திட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரு: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பெற்ற மாணவி நந்தினி, தனது முதல் மாத சம்பளத்தை இலவச கல்வி திட்டத்துக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.நந்தினி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தினி, தனது கடின உழைப்பால் கல்வி கற்று, ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பெற்றார்.
இதையடுத்து இவருக்கு கர்நாடகாவில் தொடர் பாராட்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் மங்களூருவில் ஆல்வா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நந்தினிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அவருக்கு ரூ.1 லட்சம் சன்மானத் தொகை வழங்கப்பட்டது.
இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்ற நந்தினி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வியும், சுகாதாரமும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க போதிய பணம் இருப்பதில்லை.
ஐஏஎஸ் தேர்வுக்காக நான் தயாரான போது ஆல்வா தொண்டு நிறுவனத்தின் கல்வி ஊக்கத் தொகை உதவியாகக் கிடைத்தது. அதில் நிறைய பொது அறிவு நூல்களை வாங்கி வாசித்தேன்.
தாய்மொழி அறிவு
தினமும் செய்தித்தாள்களை வாங்கி படித்தேன். கன்னட இலக்கிய நூல்களையும் அதிகமாக படித்தேன். தாய்மொழியில் எனக்கு இருந்த அறிவு, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற உதவியாக இருந்தது.
மாணவர்களுக்கு உதவ வேண்டும்
என்னைப் போல ஏழ்மையில் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். எனது சாதனைக்காக வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை ஏழை மாணவர்களின் கல்வி வசதிக்காக ஆல்வா தொண்டு நிறுவனத்துக்கே வழங்குகிறேன்.
இலவசக் கல்விக்கு முதல் மாத சம்பளம்
இதேபோல எனது முதல் மாத சம்பளத்தையும் இந்தத் நிறுவனத்தின் இலவச கல்வி திட்டத்துக்கு வழங்குவேன். கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிப் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
குவியும் வரவேற்பு பாராட்டு
நந்தினியின் இந்த அறிவிப்பை ஆல்வா தொண்டு நிறுவனம் வரவேற்று பாராட்டியுள்ளது. இதே போல பேஸ்புக், ட்விட்டர் உள் ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் நந்தினிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நந்தினி ஐஏஎஸ்-க்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.