சிரிப்புக்கு ஜிஎஸ்டி இல்லல்ல... சிரிச்சிக்கிட்டேதான் இருப்பேன்... ரேணுகா சவுத்ரி
சிரிப்பதற்கு ஜிஎஸ்டி இல்லாததால் தொடர்ந்து சிரித்துக் கொண்டேதான் இருப்பேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: சிரிப்பதற்கு ஜிஎஸ்டி இல்லாததால் தொடர்ந்து சிரித்துக் கொண்டேதான் இருப்பேன் என்று பிரதமர் மோடியின் ராமாயண கால சிரிப்புக்கு விளக்கம் அளித்துள்ளார் ரேணுகா சவுத்ரி.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நீண்ட நேரம் உரையாற்றினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி சப்தம் போட்டு நீண்ட சிரிப்பை சிரித்தார். அப்போது ராஜ்யசபா சபாநாயகர் வெங்கய்யா நாயுடு குறுக்கிட்டார்.
மருத்துவமனைக்கு செல்லுங்கள்
ரேணுகா சவுத்ரி ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். எனவே தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். நாடே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் கேலிப்பொருளாகிவிடுவோம் என்று கடிந்து கொண்டார்.
சிரிக்கட்டும் விடுங்க
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் சபாநாயகரே அவரை தடுக்காதீர்கள். நன்றாக சிரிக்கட்டும். ரேணுகாவை எதுவும் சொல்லாதீர்கள். ராமாயணத்துக்கு பிறகு நீண்ட சிரிப்பை நாம் கேட்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என்றார். மோடியின் நகைச்சுவை உணர்வை உறுப்பினர்கள் மேடையை தட்டி வரவேற்றனர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி கிடையாது
இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறுகையில் சிரிப்பதற்கு ஜிஎஸ்டி கிடையாது, அதனால் நான் தொடர்ந்து சிரித்து கொண்டேதான் இருப்பேன். பெண்ணை இழிவுப்படுத்தும் விதமான வார்த்தையில் மோடி குறிப்பிட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார்.
உரிமை மீறல் நோட்டீஸ்
மோடியின் ராமாயண கமென்ட் குறித்து காங்கிரஸ் தனது டுவிட்டரில் கூறுகையில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்ரியை பிரதமர் மோடி இழிவுப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவையில் பாரபட்சம் இல்லாமல் சபாநாயகர் நடந்து கொள்ள வேண்டும். சக உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ரேணுகாவின் சிரிப்பை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேஸ்புக்கில் வீடியோவாக ஷேர் செய்துவிட்டார். இதை அறிந்த ரேணுகா, கிரண் ரிஜிஜூவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வருவேன் என்றார்.