கன்னடர்களுக்கு என்னால் கெட்ட பெயர் ஏற்படாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பேச்சு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், பெங்களூரில் கர்நாடக பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற தத்து அதில் பேசியதாவது: நான் தலைமை நீதிபதியாக ஆற்ற வேண்டிய பணிகளை சரியாக செய்வேன்.
கர்நாடக மாநில மக்களுக்கும், கன்னடர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றை மட்டுமே. நான் கன்னட மக்களுக்காக புதிதாக எந்த நல்ல பெயரையும் சம்பாதித்து தருகிறேனோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக நான் கெட்ட பெயரை மட்டும் பெற்றுத்தர மாட்டேன். இவ்வாறு தத்து தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார், தத்துவை பாராட்டி பேசுகையில், டெல்லியை தவிர்த்து உச்ச நீதிமன்ற கிளையை வேறு ஒரு பகுதியில் திறக்க உத்தரவிடும் அதிகாரம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருப்பதை குறிப்பிட்டு, தத்து அதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் தத்து பேசும்போது அதுகுறித்து பதில் அளிக்கவில்லை.