என் மகளை மகன் போன்று வளர்த்து ராணுவத்தில் சேர்ப்பேன்: ஹனுமந்தப்பாவின் மனைவி உருக்கம்
நாக்பூர்: என் மகளை மகன் போன்று வளர்த்து ராணுவத்தில் சேர்த்துவிடுவேன் என்று சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிர் இழந்த வீரர் ஹனுமந்தப்பாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மெட்ராஸ் ரெஜிமென்ட்டை சேர்ந்த 9 வீரர்கள் பலியாகினர். கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஹனுமந்தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹனுமந்தப்பாவின் மனைவி மகாதேவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
என் கணவருக்கு ராணுவத்தில் சேர ஆசை. அவருக்கு காவல் துறையில் வேலை கிடைத்தும் அதில் சேராமல் ராணுவத்தில் சேர்ந்தார். நாட்டிற்கு எதிராக சில வேலைகள் நடப்பது குறித்து அறிந்து கவலைப்பட்டேன்.
நாம் பாரதத்தில் பிறந்தோம். நாம் வாழ பாரத மாதா இடம் கொடுத்துள்ளார். அந்த இடத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோம். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு மகன் இல்லை. என் மகளை மகன் போன்று வளர்த்து ராணுவத்தில் சேர்த்துவிடுவேன் என்றார்.