ஒரு மகன் இறந்துவிட்டான்... இன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்பி வைப்பேன்... தாகூரின் தந்தை உருக்கம்
பாகல்பூர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ஒரு மகனைப் பறிகொடுத்த தந்தை, தனது இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்பி பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்ற போது அடில் அஹம்த் தர் என்ற திவிரவாதி வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.
இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தன. பஸ்ஸில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்த வீரர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில் பீகாரில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ரத்தன் தாகூர் வீர மரணம் அடைந்தார். இந்தநிலையில் ரத்தன் தாகூரின் தந்தை பேசுகையில், என் இந்திய தாயின் சேவைக்காக ஒரு மகனை தியாகம் செய்து விட்டேன். என் இன்னொரு மகனையும் நாட்டிற்காக போராட ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன். என் இந்திய தாய் நாட்டிற்காக அவனையும் கொடுக்க தயாராக உள்ளேன். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள் என கண்ணீர் மல்க கோபத்தை வெளிபடுத்தினார்.
இந்தநிலையில், தீவிரவாதி தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்ததை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.
மேலும், புல்வாமா தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியா டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்த மத்திய அரசு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.