அதிருப்தி எம்எல்ஏக்கள்...குறைகளை நிவர்த்தி செய்வேன்... அசோக் கெலாட் உறுதி!!
ஜெய்சல்மர்: ''அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை'' என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது 18 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறினார். தற்போது மீண்டும் இணைந்துள்ள நிலையில் முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் மீண்டும் கட்சிக்குள் சச்சின் வரவிருப்பதை அசோக் கெலாட் விரும்பவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் வெடித்தது. இதற்கு காரணம் பாஜகதான் என்று முதலில் அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார். பின்னர், கட்சி நடவடிக்கைகளுக்கு கட்டுப்படவில்லை என்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பாஜவில் இணைய முயற்சித்து தோல்வி அடைந்தார். பாஜகவில் இவர் இணையாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அந்த மாநில முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா எடுத்தார் என்று கூறப்பட்டது.
திரும்பவும் காங்கிரஸ் கட்சிக்கு வருவதைத் தவிர சச்சின் பைலட்டுக்கு வேறு வழியில்லை. இதையடுத்து நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பின்னர் கட்சிக்கு திரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்று ஜெய்சல்மரில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க செல்வதற்கு முன்பு முதல்வர் அசோக் கெலாட்டிடம், ''பயனற்றவர்கள் என்று கூறியவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறீர்களா'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்று கெலாட் தெரிவித்தார்.
"அம்மா.. தம்பிக்கு என் ஞாபகமே இருக்கறது இல்லை".. திருமா போட்ட அக்காவின் கேஷுவல் போட்டோ!
மேலும், ''அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னுடன்தான் உள்ளனர். பாஜக அவர்களை திசை திருப்பப் பார்த்தது. ஆனால், எங்களை அவர்களால் உடைக்க முடியவில்லை. பணம் கொடுக்க, பதவி கொடுக்க அவர்களுடன் பேசியுள்ளனர். ஆனால், அவர்கள் எதற்கும் பணியவில்லை. அவர்களிடம் நான் கூறிவிட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.
எங்களை தாக்குவதற்கு முயற்சித்து பாஜக தோற்றது. இன்று ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, அதிகாரத்தை அடைவதற்காக தங்களது மனநிலையை இழந்து அப்பட்டமான, அசிங்கமான அரசியலை செய்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மானங்கெட்ட அரசை பார்த்தது இல்லை. அவர்களுக்கு பாடம் புகட்ட தற்போது நேரம் வந்துள்ளது'' என்றார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்குள் சேர்க்கப்படும் நிலையில் இதற்கு அசோக் கெலாட் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று போர்க் கொடி உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் சச்சின் பைலட் சேர்க்கப்படுவதும் அசோக் கெலாட்டுக்கு பிடிக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசி இருப்பது கெலாட்டுக்கு நெருடலை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.