இந்திய விமானப்படையில் பெண் பயிற்சி விமானிகள் 4 ஆண்டுகள் கர்ப்பமாக தடை
டெல்லி: இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகள் 4 ஆண்டுகளுக்கு தாய்மை அடையக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் விமானங்களை இயக்குவதற்கு பவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி என்ற 3 விமானப்படை வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 3 பெண் விமானிகளுக்கு ஹைதாராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் பயிற்சி அளிக்கபட்டு வருகிறது.
முதல் கட்ட பயிற்சி முடிந்து தற்போது 2வது கட்ட பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2வது கட்ட பயிற்சி முறைதான் மிகவும் முக்கியமானது. இந்த பயிற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இரண்டாவது கட்ட பயிற்சி முடிந்த பின், கர்நாடாகா மாநிலம் பிதாரில் 3வது கட்ட பயிற்சி ஒரு வருட காலம் அளிக்கப்படும். இதில் பிரிட்டிஷ் ஹாக் ரக என்ற போர் ரகவிமானங்களில் பயிற்சி பெறுவார்கள். அதனை தொடர்ந்து சூப்பர்சானிக் போர் விமானங்களில் பைலட்டுகளாக பறக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 3 விமானிகளும் போர் விமானங்களை இயக்கத் தேர்வு செய்யப்படும்பட்சத்தில், 83 ஆண்டுகால இந்திய விமானப்படை வரலாற்றில் போர் விமானங்களை இயக்கும் பெண்கள் என்ற வரலாற்றையும் படைப்பார்கள்.
இந்நிலையில், போர் விமான பைலட்டுகளாக தேர்வு செய்யப்படும் பெண் விமானிகள், 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர் விமானத்தில் பைலட்டுகளாக பறக்க கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகிறது. பெண் விமானிகளின் பயிற்சி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது எல்லா நாட்டு விமானப்படையிலும் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம் தான் என்று இந்திய விமானப்படையின் துணை ஏர் வைஸ் அட்மிரல் என்.கே. தாண்டன் கூறியுள்ளார்.