இனி போர் விமானிகளாக பெண்கள்.... விமானப் படை தளபதி அரூப்ராகா அறிவிப்பு
லக்னோ: நாட்டின் போர் விமானங்களில் பெண்களையும் விமானிகளாக ஈடுபடுத்துவோம் என்று விமானப் படை தளபதி அரூப் ராகா அறிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 83 வது ஆண்டு விழா உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நடைபெற்றது. இதையொட்டி விமானப் படையினரின் கண்கவர் சாகச அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் விமானப் படை தளபதி அரூப் ராகா பேசியதாவது:
விமானப் படையில் போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களை பெண் விமானிகள் இயக்கி வருகின்றனர். தற்போது அவர்களை போர் விமானங்களை இயக்குவதில் ஈடுபடுத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அரூப் ராகா அறிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக போர் விமானிகளாக பெண்கள் எப்போது ஈடுபடுத்தப்படுவார்கள் என ஊடகங்கள் கேள்வி எழுப்பி வந்தன. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட போர்விமானிகளாக பெண்களை ஈடுபடுத்தி வருகின்றன.
இந்த நிலையில் விமான படை தளபதியின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக பாதுகாப்பு தரப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.