குஜராத்தில் வெளுத்து கட்டும் மழை! மீட்புப் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள்!!
காந்திநகர்: குஜராத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் விரைந்து செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கியோரை தொடர்ந்து மீட்டு வருகின்றன.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அம்மாநிலத்தின் செளராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் மட்டும் மழை வெள்ளத்துக்கு 45 பேர் பலியாகி உள்ளனர்.
இம்மழை வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் கடந்த 2 நாட்களாக முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தின் கவாட்கா மற்றும் காரி கிராமங்கள் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இப்பகுதியில் விமானப் படையின் எம்-17வி5 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதுவரை மொத்தம் 87 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 120 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ந்தும் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.