பாக். படையிடம் சிக்கி சித்ரவதை பட்டு வீரமரணம் அடைந்த ‘கார்கில்’ நாயகனுக்கு நினைவஞ்சலி
பெங்களூரு: கார்கில் போரின் போது உயிர்த் தியாகம் செய்த போர் விமான விமானிகளுக்கு இந்திய வான்படை நினைவஞ்சலி செலுத்தியது.
கடந்த 1999ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் அருகே மே முதல் ஜூலை மாதம் வரை போர் நடைபெற்றது. இது விஜய் ஆபரேஷன் என்றும் அழைக்கப் படுகிறது. எல்லைத் தாண்டி இந்தியாவிற்குல் நுழைய முற்பட்ட பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போராளிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டு வென்றது.
அந்தப் போரில் மே 27ம் தேதியன்று வான்படை லெப்டினண்ட் நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம், படாலிக் பகுதியில் இயந்திரக் கோளாறால் வெடித்துச் சிதறியது. அவ்விமானத்தில் இருந்து அவர் பாராசூட் மூலம் தப்பித்தார். நசிகேதாவைத் தேடிச்சென்ற சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹூஜாவின் விமானம் பாகிஸ்தான் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது. அந்த விமானத்தில் இருந்து அவர் தப்பினாலும், பாகிஸ்தான் வீரர்கள் அவரைச் சிறைபிடித்து, சித்ரவதை செய்து கொன்றனர். இது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.
அஜய் அஹூஜாவின் உயிர்த் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நேற்று விமானப்படை நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியது. அதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மறைந்த அஜயின் தியாகம் மற்றும் வீரத்தைப் பற்றி புகழ்ந்து பேசினர்.
கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த அஜய் அஹீஜா ராஜஸ்தான் மாநிலம் கோடாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1985ம் ஆண்டு ஜூன் மாதம் போர் விமான ஐஏஎப் ஆனார். சுமார் 14 ஆண்டு காலம் இந்திய வான் படையில் அவர் பணி புரிந்தார்.
வீரமரணம் அடைந்த அஜய்-க்கு அல்கா என்ற மனைவியும், அன்குஷ் என்ற மகனும் உள்ளனர். மரணத்திற்குப் பின்னர் அஜய்-க்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது.