இந்திய ராணுவப் பயிற்சி விமானம்... ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கி விபத்து
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூர்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த இருவர் கடைசி நேரத்தில் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.
எம்ஐஜி-23 ரக ராணுவப் பயிற்சி விமானம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாலேசர் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து நேரிட்டதாகவும், இதில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், போர் பயிற்சி விமானம் ஒன்று ராஜஸ்தானில் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு ராணுவங்கள் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு கடந்த சில வாரங்களாக குடைச்சல் கொடுத்துவருகின்றன. இந்த நிலையில் இந்திய போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.