மீண்டும் ஓர் விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி
ஜெய்பூர்: ராஜஸதானில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் பயிற்சி விமானம் ராஜஸதான் மாநிலம் ஜெய்சல்மாரில் இருந்து இன்று மாலை புறப்பட்டது.
இந்நிலையில், மாலை 6.10 மணி அளவில் போக்ரான் அருகே திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே குதித்து விமானி உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
ஏற்கனவே, விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக விமானம், பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்ற இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் விபத்துக்குள்ளாது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.