இனி இந்தியப் பெண்களும் எதிரிகள் மீது குண்டு வீசலாம்.. தாக்குதல் பிரிவில் பெண்களுக்கும் இடம்!
பெங்களூரு: இந்திய விமானப்படையின் தாக்குதல் பிரிவில் முதல் முறையாக பெண்களும் சேர்க்கப்படவுள்ளனர். முதல் கட்டமாக 3 வீராங்கனைகளை இணைக்க விமானப்படை முடிவு செய்துள்ளது.
விரைவில் தாக்குதல் பிரிவில் 3 பெண் பைலட்டுகளை இந்திய விமானப்படை சேர்க்கவுள்ளது. இந்தப் பெருமையைப் பெறப் போகும் பெண் பைலட்டுகள் - பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி ஆகியோர் ஆவர். இதுகுறித்து ஒன்இந்தியா ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத்திற்கு அருகே துண்டிகல் பகுதியில் உள்ள விமானப்படை அகாடமியில் ஜூன் 18ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மூன்று பைலட்டுகளும் தாக்குதல் பிரிவில் இணையவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடுவார். மேலும் பயிற்சியை முடிக்கும் 129 வீரர்களுக்கு, பணி நியமனத்தையும் அளிக்கவுள்ளார். இவர்களில் 22 பேர் பெண்கள் ஆவர்.
இந்திய விமானப்படையில் இணையும் 3 பெண் பைலட்டுகளும் தங்களது பணி நியமனத்திற்குப் பின்னர் கர்நாடக மாநிலம் பீதர் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு தாக்குதல் விமானங்களில் பயிற்சி அளிக்கப்படும். அடுத்த ஆண்டு அவர்கள் தாக்குதல் விமானங்களை தனியாக கையாள ஆரம்பித்து விடுவார்கள் என்று விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.