வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களைத் தத்தெடுக்கிறார்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்
நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு,எதிரிகளின் ஆயுதங்களுக்கு இலக்காகி தமது இன்னுயிரை இழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை தத்தெடுத்து அவர்களுக்கு உதவிட,ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி:நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை,இந்தியா முழுக்க அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில்,சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நக்சல்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினர் 26 பேர் வீர மரணம் அடைந்தனர்.இது போன்ற பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக உயிர் இழக்கிறபோது, அவர்களது குடும்பங்களை வழிநடத்துவதற்கு யாரும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி நாட்டுக்காக உயிர் இழக்கிற பாதுகாப்பு படையினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுத்து உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி,"நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரணத்தையும்,குடும்ப ஓய்வூதியத்தையும் மற்றும் பணிக்கொடையையும் இனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெற்றுத்தருவார்கள். வீரர்களின் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கவும் உதவுவார்கள்."என்று கூறினார்.