இந்தியாவில் தொடர் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி! உளவுத்துறை எச்சரிக்கை!!
டெல்லி: இந்தியாவின் பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அல்-கொய்தாவுக்கு அடுத்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் தற்போது சர்வதேச அளவில் அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளனர். ஈராக் மற்றம் சிரியாவில் மட்டும் இந்த அமைப்பில் 2 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் பெருநகரங்களான மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாளர்கள் பெருகி வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யான் பகுதியிலிருந்து ஏற்கனவே 4 இளைஞர்கள் சிரியா சென்று ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து போரிட்டனர். அங்கிருந்து திரும்பிய வந்த அரீப் மஜீத்திடம், தேசிய புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் மேலும் ஐந்து இந்தியர்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் பெருநகரங்களில் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் ஐ.எஸ்அமைப்புக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு தடை விதித்தது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவில் செயல்படுபவர்களை உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர். நாடு முழுவதும் 35 பேர், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளை பரப்புபவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் நேரடி தலையீடு இந்தியாவில் இல்லை என்றாலும், அவர்களின் ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள துருக்கி அமைப்புகள் மற்றும் துருக்கி நாட்டினர் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதனால் இந்தியாவில் துருக்கி நாட்டினர் மற்றும் மையங்கள் மீது, ஐ.எஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என அனைத்து மாநில போலீசாருக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், அதை தடுக்க தயார் நிலையில் இருக்குமாறும் விமான நிலையங்களில் பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.