சமூக வலைதளங்களை இந்திய சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்: உளவுத்துறை வலியுறுத்தல்
டெல்லி: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவதுடன் இவற்றை இந்திய சட்டங்களின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று மத்திய உளவுத் துறை (ஐபி) வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் ஐபி இயக்குநர் ஆசிப் இப்ராஹிம் ஆற்றிய நிறைவு உரையில் தெரிவித்துள்ளதாவது:
அண்மைக் காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது. இது போன்ற சைபர் குற்றங்கள் தடுப்பது, சவால்களை எதிர்கொள்வது குறித்து அனைவரும் கலந்து பேசி ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம்.
அண்மைய மோதல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியதை பார்த்து இந்திய பாதுகாப்பு துறையினர் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர்.
இது தொடர்பாக இந்தியாவில் இன்னும் சட்டம் உரிய முறையில் வகுக்கப்படவில்லை. இத்தகைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் வெளிநாட்டிவரையும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராக கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவில் சைபர் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியும் என்றார்.