இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்கிறது: ஐபி தலைவர் எச்சரிக்கை
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்கிறது என்று மத்திய உளவு அமைப்பான ஐ.பி-யின் தலைவர் ஆசிப் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகள் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் பாட்னாவில் தொடர் குண்டுவெடிப்பை அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.
இதன் மூலம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர். அந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பாவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு உத்தரவு பிறப்பிப்போர் பாகிஸ்தானில்தான் இருக்கின்றனர்.
குறுகிய கால இடைவெளியில் தாக்குதல் நடத்தக் கூடிய இயக்கமாக இந்தியன் முஜாஹிதீன் உருவெடுத்திருக்கிறது. இதனால் அந்த அமைப்பின் நெட்வொர்க்கை முழுமையாக அழிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் வேறு பகுதி தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கலவரப் பகுதியாக மாற்றும் நோக்கத்தில் தொடர்ந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊடுருவ செய்கிறது. இருப்பினும் எல்லை பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் செயல்பட்டு இந்த ஊடுருவல் முயற்சிகளை முறியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாவோயிஸ்டுகளின் வன்முறை பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் தீவிரவாத செயல்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளன.
இவ்வாறு ஆசிப் இப்ராஹிம் தெரிவித்தார்.