என்.டி.டிவி. ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நிறுத்திவைப்பு
என்டிடிவி இந்தி சேனல் ஒளிபரப்பு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: என்.டி.டி.வியின் ஒளிபரப்பிற்கு ஒரு நாள் விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தியை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனல், அந்த விமானப் படை தளத்தில் உள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்த தகவலை வெளியிட்டது. இது தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் இருந்தது எனக் கூறி நவம்பர் 9-ந் தேதியன்று என்டிடிவி இந்தி சேனல் ஒளிபரப்புக்கு தடைவிதித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் இந்த தடை உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தை பாஜக அரசு நசுக்குவதாக கண்டனங்கள் எழுந்தன. இந்த தடைக்கு எதிராக என்டிடிவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே இன்று மாலை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்.டி.டி.வி மீதான தடையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.