ஆண்டவா காப்பாத்துப்பா.. கர்நாடக முருகர் கோயிலில் ஐசிசி சேர்மன் சீனிவாசன் சிறப்பு பூஜை!
மங்களூர்: மீண்டும் தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐசிசி சேர்மன், சீனிவாசன், கர்நாடகாவின் பிரபல முருகர் கோயிலான குக்கே சுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனான சீனிவாசன், ஐபில் அணி தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் நெருக்கடியால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
ஆனால், சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது ஏற்கனவே அவர் வகித்து வந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்வு நடைபெற்ற உடனேயே, கர்நாடக மாநிலம், மங்களூர் அருகேயுள்ள குக்கே சுப்பிரமணியா கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றார் சீனிவாசன். அங்கு சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இருநாட்கள் குக்கேவில் தங்கியிருந்த அவர், நேற்று கிளம்பிச் சென்றார்.
குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில், நாகதோஷ நிவர்த்தி தலமாகும். சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துள்ளது நினைவிருக்கலாம்.