ஐஆர்சிடிசியுடன் இணைந்து ரயில்வே டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !
மும்பை: இந்தியாவின் பிரதான தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது இணையதளம் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கை:
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ரயில்வே இ-டிக்கெட்டுகளை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணைந்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்துவர்கள் முதலில் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐசிஐசிஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்ல, மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம். முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இணையவழி வங்கி வசதி, மொபைல் பேங்கிங், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
டிக்கெட் விற்பனை தொடர்பாக ஐஆர்சிடிசி நிறுவனம் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தபோதும், தற்போதுதான் முதல் முறையாக ஒரு தனியார் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி ஏற்படுத்தும் புதிய வசதி மூலம், ரயில்வே டிக்கெட் புக்கிங், டிக்கெட் ரத்து குறித்த அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.