ஒலி மாசு பாடத்துக்கு மசூதி படம்.. ஐசிஎஸ்இயின் விஷமத்தனம்!!
ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6-ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் காரணிகளில் மசூதியும் இடம்பெற்றுள்ளதால் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
டெல்லி: சர்வதேச பாடத்திட்டத்தில் 6-ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் காரணிகளில் மசூதியும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பள்ளிக் கல்வித்துறையானது மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் ஆகிய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதில், மாநில அரசு பாடத்திட்டத்தை மாநில அரசும், மற்ற பாடத்திட்டத்தை (ஐசிஎஸ்இ, ஓரியண்டல் தவிர) மத்திய அரசும் அமைக்கிறது.
ஐசிஎஸ்இ பாடத்திட்ட பாடங்களை, அந்தந்த பள்ளிகள் பரிந்துரைத்து புத்தகத்தை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், தனியார் பதிப்பில் வெளியான 6-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் ஒலி மாசு குறித்து ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றுள்ளது.
அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்த படங்கள் உள்ளன. அதில், ரயில், கார், விமானம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் மசூதியும் இடம்பெற்றுள்ளது. மேற்கண்டவற்றில் இருந்து வரும் சப்தத்தை தாங்க முடியாமல் ஒருவர் காதை பொத்திக் கொள்வது போலவும் உள்ளது.
இதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, புத்தக வெளியீட்டாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அடுத்த பதிப்பில் சர்ச்சைக்குரிய அந்த பகுதி நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வாைணயத்தின் செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியான கேரி ஆர்தோன் கூறுகையில், ஐசிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான புத்தகங்களை கல்வித்துறை வெளியிடாது. எனவே, புத்தகத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் பாடங்களுக்கு அந்தந்த பள்ளியே பொறுப்பு. இதேபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.