மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்!
பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என அம்மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மீது மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என கூறி பல்வேறு வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் குஜராத்தில் உனா என்ற சிற்றூரில் இறந்த மாட்டின் தோலை உரித்தார்கள் என கூறி நான்கு தலித்துகளை கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முகமது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனக் கூறி அவரை பசு பாதுகாவலர்கள் அடித்தே கொன்றனர். அண்மையில் ரம்ஜான் பண்டிகையின் போது டெல்லியில் ஜூனைத் என்ற சிறுவன் இதே காரணத்துக்காக அடித்துக்கொல்லப்பட்டான்.
இப்படி அத்துமீறி வன்முறையில் ஈடுபடுகிறவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்துக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வருடன் பலமுறை ஆலோசித்து இந்த முடிவு எட்டப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி அஜய் நில்டவார் தெரிவித்துள்ளார்.