ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... செப்.1 முதல் தட்கல் முன்பதிவிற்கு ஐடி கார்ட் தேவையில்லை!
டெல்லி: செப்டம்பர் 1ம் தேதி முதல் தட்கல் முன்பதிவின் போது அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்கத் தேவையில்லை என ரயில்வே அறிவித்துள்ளது.
தட்கல் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் அடையாள அட்டையின் நகலை முன்பதிவு விண்ணப்படிவத்தோடு சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழக்கம் தற்போது உள்ளது. மேலும், அதே அடையாள அட்டையையே பயணம் செய்யும் போதும் டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.
இதற்கு மாறாக டிக்கெட் பரிசோதகர்களிடம் வேறு சான்றைக் காண்பித்தால், அதற்கு அபராதம் விதிக்கப் படும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டை ரயில்வே கவுண்டர்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டையின் நகல் அல்லது அடையாள அட்டை எண் வழங்க தேவையில்லை என ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால், பயணம் செய்யும் போது கட்டாயம் பயணிகள் தங்களது அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.