மூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு.. மீட்பு பணி தீவிரம் பினராயி விஜயன் அறிவிப்பு!
கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களில் 55 பேர் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று
இடுக்கி: இடுக்கி மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாக புதைந்து போனவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரும் தமிழர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில்பட்டி கயத்தாறு ஊரைச் சேர்ந்த 55 பேரும் மூணாறு நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
5 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் கேரளாவின் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அழகான சுற்றுலா தலமான மூணாறு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் ரம்மியமான பகுதி. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் அதிக அளவில் தமிழர்கள் வேலை செய்கின்றனர். தோட்ட நிர்வாகத்தினரால் கட்டிக்கொடுக்கப்படும் குடியிருப்புகளில் வசித்துக்கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
நள்ளிரவில் நிலச்சரிவு
மூணாறு கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜமாலா வார்டில் பெட்டிமடா பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து தங்கியிருந்தனர். விடாமல் பெய்து வரும் கனமழையால், தனியார் எஸ்டேட் அமைந்திருக்கும் நேமக்கடா பகுதியில் நேற்று அதிகாலை திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டனர்.
நெருங்க முடியாத அளவிற்கு வெள்ளம்
விபத்து நிகழ்ந்த நேரம் நள்ளிரவு என்பதாலும் மழையும் வெள்ளமும் சூழ்ந்துள்ளதாலும் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினரால் போக முடியவில்லை. இருப்பினும் பெரும் சிரமத்திற்கு இடையே மீட்புபணிகள் நடைபெற்றன. இதில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அனைவருமே தமிழர்கள்தான்.
தப்பியவர்களுக்கு சிகிச்சை
15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் கேரளா முதல்வர் பினராயி விஜயன். இந்தநிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த 55 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உறவினர்கள் கதறல்
கயத்தாறில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய போனவர்கள் விபத்து நடந்த பகுதியில்தான் வசித்து வந்திருக்கின்றனர். அனைவருமே மழை பற்றி பல முறை போனில் பேசியிருக்கின்றனர். விபத்துக்கு பிறகு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கோவில்பட்டியில் உள்ள உறவினர்கள் கூறியுள்ளனர்.
உயிரோடு தப்ப முடியுமா
விபத்து பற்றி கேள்விப்பட்ட உடன் கோவில்பட்டி, கயத்தாறில் இருந்து உறவினர்கள் பலர் மூணாறு தேயிலை தோட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் சம்பவம் நடந்த இடத்திற்கு போக முடியுமா? உறவினர்களை சந்திக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடும் மழை வெள்ளத்திற்கு நடுவேயும் பேரிடர் மீட்புக்குழுவினர் மண்ணில் புதைந்தவர்கள் மீட்க போராடி வருகின்றனர்.