முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைப்பது கேரளாவிற்குதான் பேராபத்து! பிடிவாதம் ஏன்? பின்னணி என்ன?
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் 3 அடி நீர் மட்டத்தை குறைக்க துணை கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 139 அடியாக முல்லை பெரியாறு நீர் மட்டம் குறைக்கப்பட உள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கி வைத்தாலும் அணைக்கு ஆபத்து இல்லை என்று, நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இதையேற்ற நீதிமன்றம், 142 அடி வரை நீரை தேக்கி வைக்க அனுமதித்தது.
ஆனாலும், கேரளாவில் சில தினங்கள் முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார். இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்தார்.
தண்ணீர் குறைப்பு
இதையடுத்து, கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தண்ணீரை குறைக்க கோரினார். இதையடுத்து துணை கண்காணிப்பு குழு இது தொடர்பாக முடிவெடுக்கலாம். அதை இரு மாநிலங்களும் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் தண்ணீர் அளவை குறைக்க உத்தரவிட்டுள்ளது துணை கண்காணிப்பு குழு.
வதந்திகள்
155 அடி வரை நீரை தேக்கி வைக்க வசதியுள்ள முல்லை பெரியாறு அணையை எப்படியாவது இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பது கேரளாவின் நோக்கம். இதனால் அணை பலவீனமாக உள்ளது என பல நெடுங்காலமாக வதந்திகளை பரப்புகிறார்கள். முல்லை பெரியாறுக்கு கீழ் பகுதியில்தான் இடுக்கி அணை உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 15 டிஎம்சி தண்ணீரைத்தான் சேகரித்து வைக்க முடியும். ஆனால் இடுக்கி அணையோ 72 டிஎம்சி கொண்டது. முல்லை பெரியாறில் இருந்து செல்லும் உபரி நீர் இடுக்கி அணைக்குதான் செல்லும்.
வாழ்வாதாரத்தை அழிக்க திட்டம்
இடுக்கி அணை நீர் வெறும் மின்சார உற்பத்திக்குதான் பயன்படுகிறது. பிறகு அரபிக்கடலில்தான் நீர் கலக்கிறது. ஆனால், முல்லை பெரியாறு தண்ணீர், தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம். அந்த வாழ்வாதாரத்தையும் கெடுத்துவிட வேண்டும். முல்லை பெரியாறு அணை இல்லாமல் போனால், அந்த தண்ணீர் இடுக்கி அணைக்கே வரும். மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதுதான் கேரளாவின் எண்ணம்.
இருப்பினும் பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு 142 அடிவரை முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்கும் உரிமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. வெள்ள காலத்தை பயன்படுத்தி பீதியை ஏற்படுத்தி அந்த உத்தரவை செல்லுபடி இல்லாமல் ஆக்க வேண்டும் என்று கேரளம் நினைத்தது. இன்று சாதித்துவிட்டது.
இடுக்கிக்குதான் கூடுதல் நீர்
ஆனால், மீண்டும் இதுபோன்ற வெள்ளம் வந்தால், அது கேரளாவிற்கு பெரும் ஆபத்து. முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் குறைக்கப்பட்டால் அந்த நீர் இடுக்கி அணைக்குதான் செல்லும். மீண்டும் கன மழை வந்தால், இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட தேவை எழும். அது மீண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தும். முல்லை பெரியாறு அணையில் கூடுதலாக நீரை தேக்கினால்தான் இடுக்கி அணைக்கு செல்லும் தண்ணீர் அளவு குறையும். ஆனால் தாங்கள் பிடித்த பிடியில் கேரளா தளர தயாராக இல்லை. இடுக்கி அணைக்கு கூடுதல் நீரை பெற காய் நகர்த்தி வெற்றி பெற்றுவிட்டது.
வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு காரணம் இல்லை
இதுகுறித்து, தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ் கூறியதாவது: 13ம் தேதி வரை, முல்லை பெரியாறு அணையில் 139 அடி அளவுக்குதான் தண்ணீர் இருந்தது. அப்போதே கேரளாவில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதற்கு காரணம், முல்லை பெரியாறுக்கு வரும் நீர் தடங்களை மறித்து கேரளா பல அணைகளை கட்டியதுதான்.
இடித்த கேரளா அரசு
செண்பகா அணை வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அந்த அணையை 1984ல், கேரள அரசு, வனத்துறையினரை அனுப்பி இடித்து தள்ளி அந்த தண்ணீரையும், இடுக்கிக் கொண்டு சென்றனர். பழையங்குடி ஆறு, கட்டப்பனை ஆறு போன்றவற்றில் இருந்து வரும் தண்ணீரையும் இடுக்கி கொண்டு சென்றனர். இடுக்கி அணை நீர் பிடிப்பு 72 டிஎம்சி. ஏறத்தாழ, 3 அணைகளின் கூட்டு பகுதிதான் இடுக்கி. மின் உற்பத்திக்கு அதிக நீர் தேவை என்பதால் ஆங்காங்கு கடலில் கலந்த தண்ணீரையெல்லாம் ஒன்று சேர்த்து இடுக்கிக்கு கொண்டு சென்றனர். அதன் விளைவுதான் வெள்ளம்.
பஞ்சத்தில் தமிழகம்
142 அடி முல்லை பெரியாறில் தேக்க முடியும் என்பது 32 ஆண்டு கால சட்ட போராட்டம். ஆனால், அணை நீர் மட்டத்தை குறைத்தால், இடுக்கி அணைக்குதான் கூடுதல் நீர் செல்லும். கொச்சி, கொல்லம், ஆலுவா, எர்ணாகுளத்திற்கு இதனால் பாதிப்பு அதிகரிக்கும். இந்த தண்ணீர் இடுக்கி சென்று மீண்டும் கேரள மாவட்டங்களுக்குள் செல்லும்போது அவர்களுக்குத்தான் பாதிப்பு. ஆனால் தமிழகத்தின் 5 மாவட்டங்களும் தண்ணீர் இன்றி பாதிக்கப்படும். கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காது, பழம், காய்கறிகள் விளையாது. இதுபோன்ற பல பிரச்சினைகளை தமிழகத்தின் 5 மாவட்ட மக்களும் சந்திக்க நேரிடும். இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.