அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் கேஜ்ரிவால் மீது சட்ட நடவடிக்கை- நீதிபதி வார்னிங்
டெல்லி: மத்திய அமைச்சர் கபில் சிபல் மகன் அமித் சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கில் மே 24ந் தேதி ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கபில் சிபல் மகன் அமித் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேரிவால் குற்றம்சாட்டியிருந்தார். தனது தந்தையின் பதவியை பயன்படுத்தி தொலைதொடர்பு நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராக அமித் சிபல் அனுமதி பெற்றதாக கேஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளான சிசோடியா, பிரசாந்த் பூஷன் மற்றும் ஷசியா குற்றம்சாட்டியிருந்தனர்.
இதை எதிர்த்து அமித் சிபல் டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை நீதிபதி சுனில்குமார் சர்மா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேஜ்ரிவால் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராகுல் மேரா ஆஜராகியிருந்தார்.
அவரிடம் நீதிபதி கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும். அல்லலது நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.
கேஜ்ரிவாலை தவிர இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன் அவர்களுக்கு தலா 2500 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அதே நேரம் கேஜ்ரிவால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு அபராதம் விதிக்காமல் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற எச்சரிக்கையை மட்டும் நீதிபதி பிறப்பித்தார்.
முன்னதாக அமித் சிபல் வழக்கறிஞர் மோகித் மாத்தூர் வாதாடும்போது, இதற்கு முன்பு மார்ச் 15ந் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஆனால் 5 வாரம் இடைவெளி விட்டும்கூட இப்போதும் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் பிரச்சார தேதியை வகுத்திருக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை நடத்துவதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு ஒத்துழைப்பு தரவில்லை என்றார்.