அம்பேத்கர் பாணியில் கோடிக்கணக்கான மக்களுடன் பவுத்த மதத்தை தழுவ மாயாவதி அதிரடி திட்டம்?
அண்ணல் அம்பேத்கர் பாணியில் கோடிக்கணக்கான மக்களுடன் பவுத்த மதத்தை மாயாவதி தழுவ திட்டமிட்டிருப்பதாக அவரது எச்சரிக்கை வெளிப்படுத்துகிறது.
ஆசம்கர்: அண்ணல் அம்பேத்கர் பாணியில் கோடிக்கணக்கான மக்களுடன் பவுத்த மதத்தை மாயாவதி தழுவ திட்டமிட்டிருப்பதாக அவரது எச்சரிக்கை வெளிப்படுத்துகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. இந்நிலையில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரதிய ஜனதா மிக அதிகளவிலான இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.
சர்ச்சை முதல்வர்
பாஜகவின் இந்த விஸ்வரூப வெற்றி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை அதிர வைக்கிறது. தற்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் அத்தனை செயல்பாடுகளே கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன.
மாயாவதி எச்சரிக்கை
குறிப்பாக ராமர் கோவில் உளிட்ட கோவில்களை கட்டுவதில்தான் யோகி படுதீவிரமாக இருக்கிறார். இந்நிலையில்தான் பாஜக தமது ஜாதி, மதம்சார்ந்த நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும்; அப்படி மாறவில்லை எனில் ஒட்டு தலித்துகள், பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருடன் இணைந்து கோடிக்கணக்கானோர் புத்த மதத்தைத் தழுவுவோம் என எச்சரித்திருக்கிறார்.
பவுத்தம் தழுவுதல்
அம்பேத்கர் இதேபோல பல லட்சம் மக்களுடன் பவுத்த மதத்தைத் தழுவியது மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மாயாவதியின் இந்த எச்சரிக்கையும் மிக முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
மாயாவதி அதிரடி திட்டம்
பாஜக தமது வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பது போல, மாயாவதியும் பவுத்த மதம் என்கிற அடையாளத்தில் ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறாரோ என்கிற கேள்வியும் விவாதமும் எழுந்துள்ளது. அரசியல் ஆதாயங்களுக்கு அப்பால் இந்துத்துவ ஒடுக்குமுறைக்கு விடப்படுகிற சவாலாகத்தான் பவுத்தம் தழுவுதலை அரசியல் பார்வையாளர் கருதுகின்றனர்.