உணவு கேட்டு வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை அசிங்கப்படுத்திய அதிகாரிகள்.. இந்த கேள்விக்கு பதில் எங்கே?
டெல்லி: ராணுவ வீரர்களுக்கு சரியான சாப்பாடு கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி தேஜ் யாதவ் என்ற எல்லை பாதுகாப்பு வீரர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் பாதுகாப்பு வீரராகும். அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்கள் வழியாக பிற ஊடகங்களையும் சென்று சேர்ந்தன.
எனவே, எல்லை பாதுகாப்பு படை இதுகுறித்த விசாரணையை தொடங்கியது. ஆனால் விசாரணை தொடங்கிய நேற்றே எல்லை பாதுகாப்பு படை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தேஜ் பகதூர் ஒரு குடிகாரர் எனவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்பட்டிருந்தது.
தண்டனை பெற்றவர்
2010ம் ஆண்டு தேஜ்பகதூர் தனது மேல் அதிகாரி தலையில் துப்பாக்கியை வைத்ததாகவும், இதற்காக அவர் 2 மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவித்ததாகவும் பாதுகாப்பு படை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மனநலம் பாதிப்பு
தேஜ் பகதூருக்கு ரெகுலராக மனநல கவுன்சலிங் கொடுப்பது கட்டாயம் என்றும், வேறு பல நடவடிக்கைகளும் அவரது ஆரோக்கியத்திற்காக எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அவரது வீடியோ உரையில் கூட அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது உறுதியாகிறது என்றும் பாதுகாப்பு பபடை வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டியது.
காரணம் என்ன?
இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்றுதான். ஒருவேளை எல்லை பாதுகாப்பு படை கூறியதை போல குடிபோதைக்கு அடிமையானவர், மனநலன் சீர் கெட்டவர் என்றே வைத்துக்கொண்டாலும், அப்படிப்பட்டவரை ஏன் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு நியமித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதிலும் பாகிஸ்தான் எல்லை என்பது மிகுந்த சென்சிட்டிவான ஏரியா. அங்கு தேஜ்பகதூரை காவலுக்கு நியமித்த காரணம் என்ன?
வீண் பழி
நிஜமான பிரச்சினைகளை தீர்த்து பிற ராணுவ வீரர்களுக்கும் நல்லது செய்ய வேண்டிய இடத்தில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் செய்த தப்பை மறைக்க வீணாக பழிபோடுகிறார்களோ என்ற சந்தேகத்தை அந்த அறிக்கை ஏற்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.