தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள் என் கட்சிக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்யுங்கள்.. ஜெகன் மோகன் அதிரடி
விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.எ.க்கள் யாரவது தங்களது கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வந்தால் அவர்களை உடனே தகுதி நீக்கம் செய்து விடுமாறு சபாநாயகரிடம் கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து ஆந்திர சட்டபேரவையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த தம்மிநேனி சீதாராம் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் புதிதாக தேர்வு செய்யப்பட சபாநாயகரை அவரது இருக்கையில் அமரவைக்கும் சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு சபாநாயகரை பாராட்டிப் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 6 முறை எம்எல்ஏ.வாகவும், பல துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்க தம்மிநேனி சீதாராம் ஆந்திர சட்ட பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் ஜெகன் மோகன் ரெட்டி
மேலும் பேசிய ஜெகன் இங்கு, கடந்த காலத்தில் எதெல்லாம் நடக்கக் கூடாதோ, அதெல்லாம் நடந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அவதூறாக பேசப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்ட நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த 67 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். அவர்களில் 23 பேரை தெலுங்கு தேசம் விலை கொடுத்து வாங்கி, ஆளுங்கட்சி இருக்கையில் அமரவைத்தது. மேலும் அவர்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது, கட்சி மாறியவர்களை தகுதி நீக்கம் செய்யும் படி நாம் விடுத்த கோரிக்கை நிராகரித்துவிட்டனர்.
ஆனால் நடந்து முடிந்த இந்த தேர்தலில் அதே 23 எம்எல்ஏ.க்கள், 3 எம்பிக்களை மட்டுமே அக்கட்சிக்கு கடவுள் வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அவர்களில் 5 பேரை நாம் இணைத்துக் கொண்டால், தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என, என்னிடம் எங்கள் கட்சி உறுப்பினர்கள் கூறினார்
ஆனால் அவர்கள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து யாராவது வருவதாக இருந்தால் கூட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தால் வரட்டும். அப்படி செய்யாமல் சட்ட மன்ற உறுப்பினராகவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் தானாக முன்வந்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேசினார்.
ஜெகன் இவ்வாறு பேசியபோது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பேரவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.