தவறை ஒப்புக்கொள்ளாவிட்டால் டெல்லி போலீஸ் மீது சட்ட நடவடிக்கை: கேரள முதல்வர் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: "சட்டத்தை மீறி யாருடைய அனுமதியையும் பெறாமல் டெல்லி போலீசார், கேரள இல்லத்திற்குள் சென்றுள்ளனர். இந்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கேரளா சட்ட நடவடிக்கை எடுக்கும்" என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த தொலைபேசி புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிறுத்த உத்தரவிட்டனர். இந்த சம்பவத்திற்கு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கண்டனம் தெரிவித்திருந்தார்.
கேரள முதல்வருக்கு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.
கேரள எம்.பிக்கள், பத்திரிகையாளர்கள் தர்ணா நடத்தினர். இந்த விவகாரத்தை கேரளா தனது சுய மரியாதைக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்த்து கொதித்து எழுந்தது. இதையடுத்து, போனில் தகவல் சொன்ன இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்ற நபரை இன்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கேரள இல்லத்தில் ரெய்டு நடத்தியதாக வரும் தகவல்கள் பொய்யானவை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்து சேனா அமைப்பில் இருந்து, விஷ்ணுகுப்தா என்ற நபர் போலீசாருக்கு போன்போட்டு, கேரள இல்லத்தில் பசு மாமிசம் பறிமாறப்படுவதாகவும், அங்கு போராட்டம் நடத்த வேண்டிவரும் என்றும் கூறினார்.
இதையடுத்து டெல்லி போலீசார் கேரள இல்லத்துக்கு சென்று, மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா, இல்லையா என்று விசாரித்துவிட்டு, இப்படி ஒரு மிரட்டல் வந்துள்ளதால், உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அறிவுறுத்திவிட்டு திரும்பினர். பாதுகாப்பை பலப்படுத்த சென்ற காவல்துறை, ரெய்டு நடத்திவிட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானது ஏன் என்று புரியவில்லை என்று கூறியிருந்தார்.
டெல்லி போலீசாரின் பதிலை ஏற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி தயாராக இல்லை. இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "சட்டத்தை மீறி யாருடைய அனுமதியையும் பெறாமல் டெல்லி போலீசார், கேரள இல்லத்திற்குள் சென்றுள்ளனர். இந்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கேரளா சட்ட நடவடிக்கை எடுக்கும்.
கேரள பவனில் எருமை மாட்டுக்கறிதான் பரிமாறப்பட்டது. டெல்லியில் எருமைக்கறி பரிமாற எந்த தடையும் கிடையாது. வழக்கம்போல, கேரள பவனில் எருமைக்கறி பரிமாறப்படும். கேரள அரசுக்கு ஆதரவுகரம் நீட்டிய கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு உம்மன் சாண்டி தெரிவித்தார்.