கருத்து கணிப்புகள் சரியானால் காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவே- சொல்வது திக்விஜய் சிங்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் சரியானால் அது காங்கிரஸ் கட்சிக்குப் பேரழிவு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. டெல்லி சட்டசபை தேர்தலில் 67% வாக்குகள் பதிவானது. டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரசும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மல்லுக்கட்டுகிறது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிலை மோசமாகவே உள்ளது என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி சட்டசபைத் தேர்தல் கருத்து கணிப்புகள் சரியானால், அது காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு ஆகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
I don't trust Poll Surveys but if what they show is correct obviously disastrous for Congress but Modi/ BJP would also need introspection.
— digvijaya singh (@digvijaya_28) February 9, 2015
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு திக்விஜய் சிங், எனக்கு கருத்து கணிப்புக்கள் மீது எல்லாம் நம்பிக்கை கிடையாது, ஆனால் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது சரியானால், அது வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவுதான். பாரதிய ஜனதாவும், பிரதமர் மோடியும் சுய பரிசோதனை செய்துக்கொள்ளும் தேவையும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்து விட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.