"மம்தாவை கட்டி பிடிச்சுப்பேன்".. வாயை கொடுத்து, சர்ச்சையில் சிக்கிய பாஜக செயலர்.. ரொம்ப ஓவரா இருக்கே
மம்தாவை கட்டி அணைப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சர்ச்சையாக பேசியுள்ளார்
கொல்கத்தா: வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல், "எனக்கு கொரோனா வந்தால், மம்தா பானர்ஜியை கட்டி அணைத்து கொள்வேன்" என்று பாஜக தேசிய செயலர் அனுபம் ஹஸ்ரா பொது மேடையிலேயே தெரிவித்து விட்டார்.. இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை அவர் மீது புகார் சென்றுள்ளது.
அனுபம் ஹஸ்ரா.. சமீபத்தில்தான் இவருக்கு பாஜக தேசிய செயலாளர் பதவி தரப்பட்டது.. கடந்த 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு முன்பாகவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர் அனுபம்.. புதிய நிர்வாகிகளின் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டபோது, அனுபம் ஹஸ்ராவிற்கு இந்த பொறுப்பினை தந்தார்.
இதனால் ஏக குஷியில் இருக்கிறார் அனுபம்.. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. ரொம்ப வருஷமாக கட்சி பணியில் இருந்தவரும், மாநில முன்னாள் தலைவருமான ராகுல் சின்ஹாவின் இடத்தைதான் இப்போது அனுபம் ஹஸ்ரா பிடித்திருக்கிறார்.. அதனால், இப்போது கூடுதல் தெம்பாக காணப்படுகிறார்.
இந்த சமயத்தில் ஒரு பேட்டியில் வாயை கொடுத்து மாட்டி கொண்டுள்ளார்.. நேற்று நடந்த கூட்டத்தில் இவர் பேசும்போது, "கொரோனாவை விட பெரிய எதிரியான மம்தாவுடன் பாஜக தொண்டர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள்.. மம்தாவுடன் மாஸ்க் இல்லாமல் போராட முடிந்தால், கொரோனாவுக்கு எதிராகவும் மாஸ்க் இல்லாமல் போராட முடியும்.
ஒருவேளை எனக்கு கொரோனா உறுதியாகிவிட்டது என்றால், நான் மம்தாவை நேரில் பார்த்து, அவரை கட்டி பிடித்து அணைச்சிப்பேன்.. ஏனென்றால், கொரோனாவால் உயிரிழந்தவர்களை மம்தா அரசு மிக மிக மோசமாக நடத்துகிறது" என்றார்.
திருமாவளவன் வேண்டாம் என்கிறார்.. டி.ஆர்.பாலு வேண்டும் என்கிறார்.. திமுக கூட்டணியில் என்ன ஆச்சு?
இந்த பேச்சு பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் எழுப்பியது.. முதல்வர் மம்தா பானர்ஜியை அவதூறாக பேசியதாக அனுபம் ஹஸ்ரா மீது சிலிகுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டுள்ளது.. மற்றொரு பக்கம், திரிணாமுல் கட்சி தொண்டர்களும் அனுபமுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்தனர்.
ஆனால், இதையெல்லாம் அனுபம் கொஞ்சம்கூட கண்டு கொள்ளவே இல்லை.. "எத்தனையோ முறை பிரதமர் மோடி குறித்து மம்தா சர்ச்சையாக பேசியிருக்கிறார்... ஒருவேளை என் மீது எப்ஐஆர் செய்யப்பட்டால், திரிணாமுல் தொண்டர்கள் 10 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்" என்று தடாலடி கண்டிஷன் போட்டு வருகிறார் அனுபம்!