ஒருவேளை தோற்றால் மீண்டும் டீ விற்க போய்விடுவேன்- நரேந்திர மோடி பிரச்சாரம்
லக்னோ: என்னுடைய டீ கூஜா தயாராக இருகின்றது.தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிர்தி ராணியை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், "நான் வளமான ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறை பதவி வகித்து வருகிறேன். ஆனால், எனது தாயார் சமீபத்தில் வாக்களிப்பதற்கு ஆட்டோ ரிக்ஷாவில் தான் வந்தார். ஊழல் அவசியம் என்று யார் சொன்னது?
சோனியாவும், ராகுலும் ஏழை மக்களை மோசம் செய்து விட்டனர். ஏழை தாயின் மகனான ஒரு டீ வியாபாரியா, ஆட்சியாளர்களை மாற்றி விடப் போகிறான்? என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஏழை குடும்பத்தில் பிறப்பது குற்றமா? டீ வியாபாரியாக இருந்தது குற்றமா? என்னுடைய கவுரவம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு வேலைக்காரன், ஏழை தாயின் மகனான ஒரு டீ வியாபாரியின் கவுரவம் உங்கள் கையில் தான் இருக்கிறது.
இந்த போராட்டத்தில் நான் தோற்றுப் போனால், எனது கூஜா தயாராக இருக்கிறது நான் பாட்டுக்கு டீ விற்க கிளம்பி விடுவேன்.
நான் ஊழலில் ஈடுபடவும் மாட்டேன். பிறரின் ஊழல்களை அனுமதிக்கவும் மாட்டேன். சுமார் 2 ஆயிரம் பேர் சேர்ந்து இந்த நாட்டையே கொள்ளையடித்து சூறையாடி வருகின்றனர்.
நாம் அதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.