ராமர் கோவில் பிரச்சனையில் அலட்சியம் காட்டினால் எரிமலையாக பொங்குவோம்...: மிரட்டும் வினய் கட்டியார்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த ஒரு அரசும் புறக்கணித்து அலட்சியம் காட்டினால் ராம பக்தர்கள் எரிமலையாக பொங்கி எழுவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. வினய் கட்டியார் மிரட்டல் விடுத்துள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா அரசுக்கு முழுமையான பலம் இல்லாத நிலையில் ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. வினய் கட்டியார் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதார மேம்பாட்டை விட ராமர் கோவில் பிரச்சனை மிக முக்கியமானது. இந்த விவகாரத்தில் உரிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
ராமர் கோவில் பிரச்சனையை எந்த ஒரு அரசு புறக்கணித்தாலும் ராம பக்தர்கள் எரிமலையாக கொந்தளிப்பார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் ராமர் கோவில் கட்டுவதற்காக சட்டத்தின் மூலமாகவோ பேச்சுவார்த்தையின் மூலமாகவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வினய் கட்டியார் தெரிவித்துள்ளார்.