மிஸ்டர் ஆமிர்கான், இந்து கடவுள்களைக் கிண்டலடித்த நீங்கள் இப்படிப் பேசலாமா?- சத்ருகன் சின்ஹா கண்டனம்
டெல்லி: மதச் சகிப்பின்மை விவகாரத்துக்கு இனி ஆமிர்கானே முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாலும் முடியாது போலிருக்கிறது.
தொடர்ந்து அவருக்கு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்போது பாஜக எம்பி சத்ருகன் சின்ஹாவும் ஆமிரைக் கண்டித்துள்ளார்.
நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாகவும், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தன்னுடைய மனைவி கிரண் தன்னிடம் கூறியதாகவும் இந்தி நடிகர் அமீர்கான் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பாரதீய ஜனதா, சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின.
இந்த நிலையில், சகிப்புத்தன்மை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக பிரபல நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, அமீர்கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சத்ருகன் சின்கா கூறி இருப்பதாவது:
ஆமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் நான் வைத்து இருக்கிறேன். ஆனால் இந்தியாவின் மத சகிப்புத் தன்மை பற்றிய அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
மிஸ்டர் ஆமிர்கான், இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இல்லையென்றால் நீங்கள் நடித்த ‘பிகே' திரைப்படத்தில் இந்து கடவுள்களை கிண்டலடித்து வெற்றி பெற்றிருக்க முடியுமா. பரந்து விரிந்த நமது நாட்டில் இயல்பாகவே அனைத்து சாதி, மதத்திற்கும் இடையே மத நல்லிணக்கமும், அமைதியும் இருந்து வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.