சென்னை போன்று பெருமழை பெய்தால் முல்லைப்பெரியாறு அணை உடையும் ஆபத்து உள்ளது: உம்மன் சாண்டி
டெல்லி: சென்னையை போன்று முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கனமழை பெய்தால் அணை உடையும் ஆபத்து உள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் பல்வேறு திட்டங்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச கேரள முதல்வர் உம்மன் சாண்டி வியாழக்கிழமை டெல்லி சென்றார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்து பேசிய பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சென்னையை போன்று முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கனமழை பெய்தால் நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்தது போன்று நீர்மட்டம் 160 அடியை தாண்டி அணை உடையும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் 60 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்று டெல்லி ஐஐடி நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்தும் அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. சென்னையை போன்று முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பெருமழை பெய்தால் ஏற்படும் ஆபத்து பற்றி தற்போதைய மழையும், வெள்ளப்பெருக்கும் புரிய வைத்துள்ளது.
கேரளாவின் அச்சத்தை போக்கும் விதமாக அணையின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன் என்றார்.