பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் முன்னேறும்போது, காஷ்மீர் ஏன் வளர முடியாது: பிரச்சாரத்தில் மோடி
ஸ்ரீநகர்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவந்த என்னால் காஷ்மீரையும் மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி அம்மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில 3ம் கட்ட சட்டசபை தேர்தலையொட்டி தலைநகர் ஸ்ரீநகரில் இன்று மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் உரையாற்றிய மோடி "பிரதமரான பிறகு நான் காஷ்மீருக்கு வராத மாதமே கிடையாது. ஒவ்வொரு மாதமும் உங்கள் மாநிலத்தில்தான் இருக்கிறேன். காஷ்மீர் மக்கள் என்மீது வைத்துள்ள அன்பை, வளர்ச்சி என்னும் வட்டியோடு நான் திரும்ப தருவேன். காஷ்மீரில் இரு தலைமுறைகளாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இரு தலைமுறையினர் வேலையின்றி தவிக்கும் கொடுமை நடக்கிறது.
நீங்கள் அனுபவிக்கும் வேதனை உங்களுடையது கிடையாது, என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்று உலகிற்கு காண்பிக்க வளர்ச்சிதான் சிறந்த வழி. எனவே காஷ்மீரை மேம்படுத்துவதில் எனது அரசு உறுதி பூண்டுள்ளது. வாஜ்பாய் தொடங்கி வைத்த காஷ்மீர் வளர்ச்சி திட்டங்களை நான் நிறைவேற்றி தருவேன்.
காஷ்மீரில் பழையபடி சுற்றுலா துறையை வளர்த்தெடுத்தால், வேலைவாய்ப்பு பெருகும். இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். வேலை தேடி காஷ்மீர் இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
காஷ்மீரில் வெள்ளம் சூழ்ந்தபோது இம்மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தது. வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தபோது அதை மாநில அரசுக்கு அளிக்க வேண்டாம், நேரடியாக மத்திய அரசே நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஏனெனில் மாநில அரசு அதிலும் ஊழல் செய்துவிடும் என்று மக்கள் அச்சப்பட்டனர்.
மத்தியில் பாஜக ஆட்சி வந்தபிறகு காஷ்மீரில் நடத்தப்பட்ட கூட்டுக்கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழித்தது போல தீவிரவாதமும் ஒழித்துக்கட்டப்படும். ஜவான்களும், போலீசாரும், சாமானிய மக்களும் அன்றாடம் கொலை செய்யப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் காஷ்மீரில் நிலைநிறுத்தப்படும்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதி பூகம்பத்தால் சீர்குலைந்து போனபோது முதல்வராக இருந்த நான், அதனை மீட்டு தற்போது ஒரு முன்னேறிய பகுதியாக மாற்றியுள்ளேன். கட்ச் பகுதியை மேம்படுத்த முடியும்போது ஏன் காஷ்மீரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாது. காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.