மாயாவதிக்கு எதிராக நடிகை ராக்கி சாவந்த்... இந்திய குடியரசுக் கட்சி அதிரடி வியூகம்!
வருகிற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி போட்டியிட்டால் அவருக்கு எதிராக நடிகை ராக்கி சாவந்த் களம் இறக்கப்படுவார் என்று ராம்தாஸ் அத்வாலே அதிரடியாக அறிவித்துள்ளார்.
அலகாபாத்: வருகிற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிட்டால் அவருக்கு எதிராக நடிகை ராக்கி சாவந்த் களம் இறக்கப்படுவார் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மயாவதி தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருந்தார். தற்போது அவரது மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு தேர்தலில் அவர் போட்டியிட்டால் அவருக்கு எதிராக பாலிவுட் நடிகை ராக்க்கி சாவந்த்தை களம் இறக்க மற்றொரு தலித் அமைப்பான இந்திய குடியரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியக் குடியரசுக் கட்சியின் மகளிர் பிரவு தலைவியாக இருந்து வருகிறார் ராக்கி சாவந்த். எந்தத் தொகுதியை மாயாவதி தாம் போட்டியிட தேர்வு செய்கிறாரோ அந்தத் தொகுதியில் ராகி சவாந்த்தும் களம் இறக்கப்படுவார் என்கிறார் ராம்தாஸ் அத்வாலே.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியக் குடியரசுக் கட்சி வருகிற தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அத்வாலே கூறினார். கூட்டணி ஒத்துவரவில்லை என்றால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்தமுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 200-க்கும் அதிகமான இடங்களில் இந்தியக் குடியரசுக் கட்சி தனித்தே வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
டாக்டர் அம்பேத்காரின், பட்டியில் இன மக்கள் கூட்டமைப்பினை தழுவி தொடங்கப்பட்ட இந்தியக் குடியரசுக் கட்சி 1950-களில் மகராஷ்ட்ராவில் நல்ல செல்வாக்கை பெற்றிருந்தது. இருப்பினும், பல்வேறு அமைப்புகளாக அக்கட்சி பிரிந்ததால் சிதறுண்டு போனது. சமீபத்தில் அந்த அமைப்புகளை ஒன்றினைத்து இந்தியக் குடியரசுக் கட்சியை அத்வாலே மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளார். இதில் அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் தலைமையிலான அமைப்பு தவிர மற்ற அனைத்து சிறிய அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. அந்தக் கட்சிக்கு இந்தியக் குடியரசுக்கட்சி(ஏ) என பெயரிடப்பட்டுள்ளது.