மோடி, அமித்ஷாவுக்கு திராணி இருந்தால் உ.பி. மறுதேர்தலுக்கு தயாரா?: மாயாவதி 'பொளேர்'
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை கோரும் தைரியம் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் உள்ளதா? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி, பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் 324 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து மாயாவதி லக்னோவில் கூறியதாவது:
இந்த முடிவுகள் நம்பும்படியாக இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது பாஜகவுக்கு வாக்களிக்கும் வகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தினர் ஒருவருக்குக் கூட போட்டியிட வாய்ப்பளிக்காத பாஜக, முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில்கூட வெற்றி பெற்றிருப்பது நம்பும்படியாக இல்லை. எனவே மறு தேர்தல் வைக்க வேண்டும்.
பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும் துணிச்சல் இருந்தால் மறுதேர்தலுக்கு தேர்தல் ஆணையத்தை நாட வேண்டும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.