சவால் வேண்டாம்.. தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம்... ராணுவம் தடாலடி
Recommended Video
டேராடூன்: தேவைப்பட்டால் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த தயங்கமாட்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி தேவராஜ் அன்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி எல்லை தாண்டி பாதுகாப்பு படையினர் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதுகுறித்து தற்போது வரை வாதப் பிரதிவாதங்கள் நிலவி வருகின்றன.
இந்தநிலையில், டேராடூன் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற ராணுவ துணை தளபதி தேவராஜ் அன்பு கூறுகையில், சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் எதிரிகளுக்கு நமது நாட்டின் ராணுவ பலம் பற்றி தெரிந்து இருக்கும். இனியும் சவால் விடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்தே சர்ஜிகல் ஸ்டிரைக் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை பேசிய ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் டி எஸ் குடா, சர்ஜிகல் ஸ்டிரைக் மிகைப்படுத்தப்படுவதாக கூறினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது, வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்த அவர், பாதுகாப்பு படையின் வெற்றி வரவேற்கதக்க நடவடிக்கை என்றாலும், அதனை அளவு கடந்து மிகைப்படுத்த கூடாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.